மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் கனடியப் பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் கான்பெராவில் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் மற்றும் பிராந்தியத்தில் அதன் செல்வாக்கு குறித்துப் பேசிய இரு தலைவர்களும், ஈரான் தனது அணு ஆயுதங்களை உருவாக்கும் திறனை முழுமையாக இழக்கும் வரை முறையான மற்றும் நிலையான போர்நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவது சாத்தியமற்றது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
கனடியப் பிரதமர் மார்க் கார்னி பேசுகையில், போர் பரவி வருவதையும் பொதுமக்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களையும் ஒருபோதும் ஏற்க முடியாது என்று குறிப்பிட்டார். போர்நிறுத்தம் ஏற்படுவதற்கு முன்னதாக, இத்தகைய தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார். ஈரானுக்கு எதிரான தாக்குதலில் கனடா நேரடியாகப் பங்கேற்குமா என்ற கேள்விக்கு, “எமது நட்பு நாடுகளுக்குத் தேவைப்படும்போது அவர்களுடன் துணை நிற்கவும், கனடியர்களைப் பாதுகாக்கவும் நாம் எப்போதும் தயாராகவே இருக்கிறோம்; எதனையும் இப்போதே நிராகரிக்க முடியாது” எனப் பதிலளித்தார்.
அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ், மத்திய கிழக்கு மோதல்கள் வளைகுடா பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுக்கும் பரவி வருவது குறித்துத் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். குறிப்பாக, சுற்றுலாத் தளங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்படுவது உலகளாவிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என அவர் குறிப்பிட்டார். ஈரான் அணு ஆயுதம் பெறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதில் இரு நாடுகளும் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதை இச்சந்திப்பு உறுதிப்படுத்தியது.
ஈரானின் இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அண்மையில் நடத்திய தாக்குதல்களுக்கு அவுஸ்திரேலியாவும் கனடாவும் தமது மறைமுக ஆதரவை வழங்கியுள்ளன. ஈரானின் அணு ஆயுத உற்பத்தி மையங்களை அழிப்பதன் மூலமே பிராந்தியத்தில் நிரந்தர அமைதியை நிலைநாட்ட முடியும் என இரு தலைவர்களும் நம்புகின்றனர். இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

