‘அட்டக்கத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்து வரும் நடிகை நந்திதா ஸ்வேதா, தனது திரைப்பயணம், வெற்றிகள், தோல்விகள் மற்றும் சினிமா குறித்த தனது நிலைப்பாடு பற்றித் தெரிவித்துள்ளார்.
நான் ஒரு சினிமா வெறி பிடித்தவள். சிறுவயதில் இருந்தே சினிமா பைத்தியம் என்று கூட சொல்லலாம். நடிகை ஆகப் போகிறேன் என்று யார் கேட்டாலும் தயங்காமல் கூறுவேன்.
ஒரு நிகழ்ச்சியில் தன்னைச் சந்தித்த இயக்குநர் விஜயகுமார், தன்னை அவரது இயக்கத்தில் வெளியான ‘நந்தா லவ்ஸ் நந்திதா’ என்ற கன்னடப் படத்தில் நடிக்க வைத்ததார்; அதன்பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். நான் நடித்ததிலேயே ‘அட்டகத்தி’ தான் எனக்குப் பிடித்த படம். அந்தப் படம் தான் எனக்கு மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்தது.
சினிமாவில் எதுவும் நிரந்தரம் கிடையாது. ஒரு படம் ‘ஹிட்’ அடித்ததும் நாம் பெரிய ஆள் என்று நினைத்துவிடக் கூடாது. அதுதான் மிகப்பெரிய பொய். ஒரே படத்தில் யாருமே கோடி கோடியாக சம்பாதிக்க முடியாது. படிப்படியாகவே ஒரு நிலையை பிரபலங்கள் அடைய முடியும். சாதனையில் மட்டுமல்ல, சம்பளத்திலும் தான்.
எதிர்நீச்சல், உள்குத்து படங்களில் நடிக்கும்போது பலர் “இந்தப் படங்கள் வேண்டாம்” என்றார்கள்; ஆனால் மீறி நடித்தபோது அந்தப் படங்கள் ‘ஹிட்’ அடித்தன. சில படங்கள் நம்பி நடித்தும் கைகொடுக்கவில்லை. வெற்றி, தோல்வி இரண்டுமே இரண்டறக் கலந்தது தான் சினிமா.
சினிமாவில் நான் கற்றுக்கொண்ட பெரிய பாடம் பொறுமை தான். வேண்டாம் என்று உதறித் தள்ளிய படங்கள் நிறைய வெற்றி பெற்றுள்ளன. ஆனால் அதற்காக வருத்தப்படவில்லை. முடிந்தது முடிந்தது தான். அதற்காகக் கவலைப்பட்டுக் கிடப்பது முட்டாள்தனம். அடுத்தது என்னவென்று போய்க்கிட்டே இருக்கவேண்டும்.
கவர்ச்சியாக நடிப்பேன், நடிக்க மாட்டேன் என்றெல்லாம் முடிவு எடுத்து வைத்துக்கொள்வது கிடையாது. கதைக்குத் தேவைப்பட்டால் எந்த மாதிரியான கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தயார் என அவர் தெரிவித்தார்.