டிட்வா (Ditwa) சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களை அரசாங்கம் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அனர்த்தத்தின் பின்னரான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து குற்றச்சாட்டுக்களைச சுட்டிக்காட்டினார்:
அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மலையக மக்களுக்குப் பாதுகாப்பான இடங்களில் மாற்றுக் காணிகளை வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரை எவ்வித உருப்படியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
அனர்த்த நிவாரண முகாம்களில் தங்கியிருந்த மக்கள், முறையான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாமலேயே வலுக்கட்டாயமாக மீண்டும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கே அனுப்பப்பட்டுள்ளனர்.
“பாதிக்கப்பட்ட மக்களுடன் எவ்விதக் கலந்தாலோசனையும் செய்யாமல், மாடுகளை அனுப்புவது போல அவர்களை மீண்டும் அதே ஆபத்தான இடங்களுக்கு அரசாங்கம் துரத்துகிறது” என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
மீண்டும் ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது மண்சரிவுகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் சம்பவித்தால், அதற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என அவர் எச்சரித்தார். மலையக மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வுரிமை விடயத்தில் அரசாங்கம் காட்டும் இந்த மெத்தனப் போக்கு நியாயமற்றது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.