வேற்றுக்கிரகவாசிகள் உண்மையிலேயே இருக்கிறார்களா? பாபா வங்காவின் 2026 அதிரடி கணிப்பு!

24

மனித குலத்தின் நீண்டகாலக் கேள்வியான “ஏலியன்கள் (Aliens) இருக்கிறார்களா?” என்பது குறித்த விவாதம், அண்மைக்கால விண்வெளி நிகழ்வுகள் மற்றும் கணிப்புகளால் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இதுவரை வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதற்கான உறுதியான அறிவியல் ஆதாரங்கள் எவையும் கிடைக்கவில்லை என்ற போதிலும், அவ்வப்போது தோன்றும் விசித்திரமான விண்வெளிப் பொருட்கள் உலகைக் கவனிக்க வைக்கின்றன.

சமீபத்தில் சூரிய குடும்பத்திற்குள் நுழைந்ததாகக் கூறப்படும் ‘3I/ATLAS’ என்ற விண்வெளிப் பொருள் குறித்துச் சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன. இது வேற்றுக்கிரகவாசிகளின் உளவுச் சாதனமாக இருக்கலாம் எனச் சிலர் சந்தேகம் எழுப்பினாலும், விஞ்ஞானிகள் இதனை மறுக்கின்றனர். இது இயற்கையாக உருவாகும் ஒரு நட்சத்திரங்களுக்கு இடையிலான (Interstellar) விண்கல் அல்லது தூசிப் பொருளாகவே இருக்கக்கூடும் என்றும், இது செயற்கையாக உருவாக்கப்பட்டதற்கான எவ்வித அடையாளமும் இல்லை என்றும் அவர்கள் விளக்கியுள்ளனர்.

அமெரிக்கா சமீபத்தில் வெளியிட்ட அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்கள் (UFO) தொடர்பான ஆவணங்கள் ஏலியன்கள் பற்றிய தேடலைத் தீவிரப்படுத்தியுள்ளன. இதற்கிடையில், பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்கா (Baba Vanga), 2026 ஆம் ஆண்டு நவம்பரில் ஒரு பிரம்மாண்ட விண்கலம் பூமிக்கு வரும் என்றும், மனிதர்களுக்கும் ஏலியன்களுக்கும் இடையே தொடர்பு ஏற்படும் என்றும் கணித்ததாகக் கூறப்படுவது மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 9/11 தாக்குதல் மற்றும் கொரோனா போன்றவற்றை அவர் கணித்ததாக நம்பப்பட்டாலும், இத்தகைய கணிப்புகள் எழுத்துப்பூர்வமான ஆதாரங்களாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாசா (NASA) போன்ற விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் பிரபஞ்சத்தில் உயிரினங்களைத் தேடும் பணியைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன. கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்கள் இருப்பதால் உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், இதுவரை ஒரு நுண்ணுயிர் (Microbe) கூட பூமிக்கு வெளியே கண்டறியப்படவில்லை. 2026 நவம்பரில் ஏதேனும் அதிசயம் நடக்குமா அல்லது இதுவும் ஒரு சாதாரணக் கணிப்பாகக் கடந்து போகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 

Exit mobile version