ஜிந்துப்பிட்டி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்கரை வீதி பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்றைய தினம் (22) 95 வத்தை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இந்தச் சந்தேகநபர் பிடிபட்டார். இதன்போது அவரிடமிருந்து 24 கிராம் 300 மில்லிகிராம் ‘ஐஸ்’ (Ice) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஜிந்துப்பிட்டி பகுதியில் அண்மையில் மர்ம நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், இரண்டு சிறுவர்கள் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் முன்னதாக 5 சந்தேகநபர்களைக் கைது செய்திருந்த நிலையில், தற்போது கைதானவருடன் சேர்த்து மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (23) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இக்கொலைச் சம்பவத்திற்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் இடையே தொடர்பு இருக்கலாமா என்ற கோணத்தில் கடற்கரை வீதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.