நடிகர் ரஜினிகாந்த் திமுகவின் மிரட்டலுக்குப் பயந்துதான் அரசியலுக்கு வரவில்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்துக்கு, பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மாநிலத் தலைவருமான அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) தளப் பதிவில், ஆதவ் அர்ஜுனாவின் பேச்சை “மாயை” (Illusion) என்று விமர்சித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியத் திரையுலகின் அடையாளமாக விளங்குபவர் என்றும், யாராலும் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் அவர் இருப்பதாகவும் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த இடம் அவருக்கு எளிதில் கிடைக்கவில்லை; அரை நூற்றாண்டு காலக் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் கலைத் திறனால் மக்களால் வழங்கப்பட்ட கௌரவம் அது என அவர் புகழ்ந்துள்ளார்.
ரஜினிகாந்தின் மனவலிமை குறித்து விமர்சிப்பவர்களைச் சாடிய அண்ணாமலை, “தனக்கென தனி அடையாளம் இல்லாமல், மாமனாரின் பணத்தை வைத்துப் பல கட்சிகள் மாறி அடையாளம் தேடிக்கொள்பவர்கள், ஐம்பது ஆண்டுகளாக உச்சத்தில் இருக்கும் ஒருவரின் மனவலிமையைப் பேசுவது நகைப்புக்குரியது” எனச் சாடியுள்ளார். அன்றும், இன்றும், என்றும் அவர் சூப்பர் ஸ்டாராக இருப்பதற்கு அவரது அபாரமான மனவலிமையே காரணம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
ஆதவ் அர்ஜுனாவின் இந்தப் பேச்சு ரஜினி ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அண்ணாமலையின் இந்த ஆதரவு அறிக்கை ரஜினிகாந்தின் ஆளுமையைப் பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. ஒரு தலைவரின் கலை மற்றும் தனிப்பட்ட பயணத்தைச் சிறுமைப்படுத்துவதை ஏற்க முடியாது என்பதே அண்ணாமலையின் கருத்தின் சாரமாக உள்ளது.

