கடந்த பெப்ரவரி மாதம் 10-ஆம் திகதி அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு (CCD) மாற்ற ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் நேற்று (12) உத்தரவிட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற அன்றைய தினம் அதிகாலை, பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச் சென்ற வேன் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே இந்தச் சோகமான சம்பவம் பதிவாகியிருந்தது.
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் சார்பில் ஆறுக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆஜராகி தமது வாதங்களை முன்வைத்தனர். தற்போது யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் தமக்குத் திருப்தி இல்லை எனவும், விசாரணைகளை மேலும் சுதந்திரமாகவும் விரிவாகவும் மேற்கொள்ள வேறு பிரிவுக்கு மாற்ற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்தக் கோரிக்கைக்குப் பொலிஸ் தரப்பிலிருந்து கடுமையான ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன. இதனால் நீதிமன்றத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இருப்பினும், இரு தரப்பின் சமர்ப்பணங்களையும் நீண்ட நேரம் பரிசீலித்த நீதவான், வழக்கின் முக்கியத்துவத்தையும் விசாரணைகளின் நம்பகத்தன்மையையும் கருத்திற்கொண்டு, விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு உடனடியாக மாற்றுமாறு உத்தரவிட்டார்.
சிறுவன் உயிரிழந்த இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்ததோடு, மக்கள் மத்தியில் பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்துப் பல்வேறு விமர்சனங்களையும் கிளப்பியிருந்தது. தற்போது விசாரணை கொழும்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதால், இந்த வழக்கு விசாரணையில் புதிய திருப்பங்கள் ஏற்படும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.