முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை, இலங்கை இராணுவத்திற்கும் அதன் புலனாய்வுப் கட்டமைப்பிற்கும் ஒரு “தொந்தரவான முன்னேற்றம்” என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் இது குறித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தேசிய பாதுகாப்பிற்காகத் தியாகங்களைச் செய்த அதிகாரிகள் அரசியல் லாபங்களுக்காகப் பகடைக்காய்களாக மாற்றப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
எல்.ரீ.ரீ.ஈ-யின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை இலக்கு வைத்த நடவடிக்கைகள் மற்றும் குமரன் பத்மநாதனை (KP) கைது செய்த முயற்சிகளில் சுரேஷ் சலே ஆற்றிய பங்களிப்பைச் சுட்டிக்காட்டிய சப்ரி, இவ்வாறான அதிகாரிகளைத் தண்டிப்பது தேசிய பாதுகாப்பிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.
ஜனநாயக நாட்டில் சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்றாலும், தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகள் ஆதாரங்களை விட “போட்டியிடும் கதைகளை” (Competing Narratives) அடிப்படையாகக் கொண்டு, ஒரு அரசியல் போர்க்களம் போல வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் சாடினார்.
விசாரணைகளில் FBI உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் ஏற்கனவே விரிவான பங்களிப்பை வழங்கியுள்ளன. மேலதிக விசாரணைகள் புதிய முடிவுகளைத் தராது எனச் சர்வதேசக் கூட்டாளிகள் சுட்டிக்காட்டும் நிலையில், இதனை மீண்டும் மீண்டும் “ஆயுதமாக” (Weaponizing) பயன்படுத்துவது இலங்கையின் சர்வதேச நம்பகத்தன்மையைக் கெடுக்கும் என அவர் குறிப்பிட்டார்.
தற்காலிக அரசியல் லாபத்திற்காகப் பாதுகாப்பு அதிகாரிகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவது, ஆயுதப் படைகளுக்குள் இருக்கும் மன உறுதியைப் பலவீனப்படுத்தும். இது எதிர்காலத்தில் நாட்டைப் பாதுகாக்க முன்வருபவர்களுக்குத் தவறான சமிக்ஞையை (Troubling Signal) அனுப்பும் என்றும் அவர் எச்சரித்தார்.
ஆனால் அது சட்டம் மற்றும் சான்றுகள் மூலம் இருக்க வேண்டுமே தவிர, பிரிவினையைத் தூண்டும் நாடகங்கள் மூலம் அல்ல” எனத் தனது அறிக்கையை அவர் நிறைவு செய்துள்ளார். சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அது ஒரு அரசியல் பழிவாங்கல் என்ற விமர்சனங்கள் வலுத்து வரும் நிலையில் அலி சப்ரியின் இந்தக் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

