அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி – அகலிய, குட்டியாவத்தை பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் நுகேகொடை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்து காவல்துறையினர் அங்கு சென்றபோது, தடயங்களை அழிக்கும் நோக்கில் அந்தச் சிற்றூந்து தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் படுகொலையானது வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ‘கரந்தெனிய சுத்தா’ எனப்படும் பாதாள உலகக் குழுத் தலைவனால் திட்டமிடப்பட்டிருக்கலாம் எனப் காவல்துறையினர் பலமாகச் சந்தேகிக்கின்றனர். கொல்லப்பட்ட சட்டத்தரணி ஆரம்பத்தில் கரந்தெனிய சுத்தாவிற்காக வழக்குகளில் முன்னிலையாகி வந்த நிலையில், பின்னர் அவரது பரம எதிரியான ‘லோகு பெட்டி’ என்பவருக்காக ஆஜராகத் தொடங்கியுள்ளார். இதனால் ஏற்பட்ட முரண்பாடே இந்தக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
தன்னைப் பற்றிய ரகசியத் தகவல்களை எதிர்த்தரப்பான லோகு பெட்டிக்கு அந்தச் சட்டத்தரணி கசியவிட்டிருக்கலாம் என்ற ஆத்திரத்தில், கரந்தெனிய சுத்தாவின் தரப்பினரால் இந்தத் தாக்குதல் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. தப்பியோடிய கொலையாளிகளை அடையாளம் காணவும், இந்தச் சதித்திட்டத்தின் முழுமையான பின்னணியை வெளிக்கொணரவும் நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.