AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

image 1200x800 26

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI Impact Summit 2026’ சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (17) மாலை இந்தியாவுக்குப் பயணம் செய்யவுள்ளார். ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அவர் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் மிக முக்கியமான விஜயங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவை (AI) மனிதகுலத்தின் மேன்மைக்காகவும், நிலையான வளர்ச்சிக்காகவும் எவ்வாறு பொறுப்புணர்வுடன் பயன்படுத்தலாம் என்பதை ஆராய்வதே இந்த 5 நாள் மாநாட்டின் பிரதான நோக்கமாகும். ‘மக்களுக்காக, பூமிக்காக, முன்னேற்றத்திற்காக’ (People, Planet, Progress) என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில், பிப்ரவரி 19-ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட உரையாற்றவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா, நெதர்லாந்து பிரதமர் உள்ளிட்ட 20 நாடுகளின் அரச தலைவர்களும், 45-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர். மேலும், கூகுள், மைக்ரோசாப்ட், என்விடியா போன்ற உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளும் இதில் பங்கேற்கின்றனர்.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியப் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்துப் பேசவுள்ளார். குறிப்பாக, இலங்கையின் டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டம் (SL-UDI) மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படவுள்ளன. மேலும், பிரான்ஸ் உள்ளிட்ட பிற நாட்டுத் தலைவர்களுடனும் அவர் தனித்தனியாகப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

Exit mobile version