பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாளாந்த சம்பளத்தை 1,750 ரூபாவாக உயர்த்துவதற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தம் இன்று (30) முற்பகல் கைச்சாத்திடப்பட்டது.
பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்ட அமைச்சுக்கு இடையில் இந்தச் சம்பள உயர்வுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதிகரிக்கப்பட்ட புதிய சம்பளம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல் தொழிலாளர்களுக்குக் கிடைக்கப்பெறும் என்று பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார்.
சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள அதேவேளை, சில முக்கிய குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பளம் உயர்த்தப்பட்டாலும், அதனுடன் தொடர்புடைய தனியார் துறையினர் எவ்வித ஊதிய அதிகரிப்புமின்றி ஏமாற்றப்படுவதாக அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு வரவேற்கத்தக்கது என்றாலும், அரசாங்கத்தினால் ஏனைய மக்களுக்கு வழங்கப்படுகின்ற ஏனைய சலுகைகள் மற்றும் நிவாரணங்கள் பெருந்தோட்ட மக்களுக்குச் சென்றடைவதில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நீண்டகாலப் போராட்டங்களுக்குப் பின்னர் இந்தச் சம்பள உயர்வு எட்டப்பட்டுள்ள நிலையில், அது அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.