சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு கூடுதல் உர மானியம்: அமைச்சர் சமந்தா வித்யரத்ன

world 75

இலங்கையில் உள்ள சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு மேலதிகமாக 5,000 ரூபாய் உர மானியம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தோட்டப்பணிகள் மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்தா வித்யரத்ன இன்று (மே 12) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

உலகளாவிய ரீதியில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பு ஆகியவற்றால் விவசாயிகளுக்கு ஏற்படும் நிதிச் சுமையைக் குறைப்பதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும். தற்போது நாட்டில் உரங்களுக்குத் தட்டுப்பாடு ஏதும் இல்லை என்ற போதிலும், சர்வதேச சந்தையில் கச்சா பொருட்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துச் செலவுகள் உயர்ந்துள்ளதால், வரும் காலங்களில் உரங்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

குறிப்பாக கடல்சார் காப்பீட்டுக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலை உயர்வு இறக்குமதி செலவுகளை அதிகரித்துள்ளன. இந்தச் சவால்களுக்கு மத்தியிலும் விவசாயிகளுக்குத் தடையின்றி உரங்களை விநியோகிப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என அவர் மேலும் தெரிவித்தார்.முன்னதாக, நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் நெல் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 5,000 ரூபாய் வீதம், அதிகபட்சமாக இரண்டு ஹெக்டேருக்கு 10,000 ரூபாய் வரை மானியம் வழங்கப்பட்டது. அதே அடிப்படையில், தற்போது தேயிலைத் துறையிலும் சிறு தோட்ட உரிமையாளர்களுக்கு இந்த மேலதிக நிவாரணம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதி ஏற்கனவே திறைசேரியினால் (Treasury) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், உரிய பொறிமுறையின் ஊடாக இந்த மானியம் விவசாயிகளைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேயிலை உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளைச் சீர்செய்து, சிறு தோட்ட உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். உரங்களின் விலை அதிகரிப்பால் உற்பத்தி பாதிக்கப்படக் கூடாது என்பதில் அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த மானிய அதிகரிப்பு மூலம் தேயிலை உற்பத்தியை மீண்டும் வலுப்படுத்த முடியும் எனவும், இதன் பயனாக நாட்டின் அந்நியச் செலாவணி வருமானம் அதிகரிக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

Exit mobile version