2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் இதுவரை நடத்தப்படாத பாடங்களுக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு நாளை (06) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாளை நள்ளிரவு முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை பின்வரும் செயற்பாடுகள் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன. பரீட்சார்த்திகளுக்காக நடத்தப்படும் தனியார் மேலதிக வகுப்புகள் (Tuition Classes).
பாட ரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள். மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல். பரீட்சை வினாக்களை ஒத்த வினாக்கள் வழங்கப்படும் என சுவரொட்டிகள், பதாதைகள் அல்லது துண்டுப் பிரசுரங்களை அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக வெளியிடுதல்.
எந்தவொரு தனிநபரோ அல்லது நிறுவனமோ இந்த உத்தரவுகளை மீறிச் செயற்பட்டால், அவர்கள் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு, அவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சையில் எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகள் 2026 ஜனவரி 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை.
நாடு முழுவதும் 2,362 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

