வாள்வெட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுச் சொத்துச் சேர்த்த எட்டுப் பேருக்கு எதிராக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுச் சொத்துச் சேர்த்தவர்களுக்கு எதிரான விசாரணைகளை நடத்துவதற்காக நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட காவல்துறைப் பிரிவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே, இந்தக் குற்றத்தடுப்புப் பிரிவினர் இந்த விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
நீதிமன்ற வழக்கு: இந்த எட்டுப் பேரில் மூவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்திலும், ஐவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஒருவருக்கு எதிராக, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுச் சொத்துச் சேர்ந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
ஏழு பேருக்கு எதிராக வன்முறைச் செயற்பாடுகளில் (வாள்வெட்டு) ஈடுபட்டுச் சொத்துச் சேர்ந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
வன்முறைகளில் ஈடுபட்டுச் சொத்துச் சேர்த்தவர்கள் மற்றும் வன்முறைகளை ஒழுங்கமைத்தவர்களுக்கு எதிராக எதிர்வரும் நாள்களில் சிறப்புப் புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்ளக் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

