50 அடி பள்ளத்தின் விளிம்பில் நின்ற பேருந்து: 40 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சாரதியின் சமயோசித புத்தி!

image 3e3e6e2855

வலப்பனை இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று இன்று (01) பாரிய விபத்துக்குள்ளாகவிருந்த நிலையில், சாரதியின் துரித செயற்பாட்டால் 40 பயணிகளின் உயிர் மயிரிழையில் காப்பாற்றப்பட்டுள்ளது.

நில்தண்டாஹின்னையில் இருந்து தெரிபெஹே நோக்கி இப்பேருந்து பயணித்துக் கொண்டிருந்தது. ராசிங்கொல்ல முதலாவது வளைவுப் பகுதியில் சென்றபோது, பேருந்தின் ‘ஜொயிண்ட்’ (Joint) பகுதி திடீரெனத் துண்டிக்கப்பட்டுள்ளது.

பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தை நோக்கிச் சரிந்தபோது, 15 வருட அனுபவம் கொண்ட சாரதியான சமன் திலகசிறி (48), உடனடியாகக் கை தடுப்பை (Hand Brake) இழுத்துப் பேருந்தை பள்ளத்தின் விளிம்பிலேயே நிறுத்தியுள்ளார்.

சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த சாரதி, ‘டிட்வா’ (Ditwa) சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இந்த வீதி ஏற்கனவே கடுமையாகச் சேதமடைந்துள்ளது எனச் சுட்டிக்காட்டினார். வீதி இன்னும் புனரமைக்கப்படாததால், இவ்வாறான ஆபத்தான வளைவுகளில் வாகனங்களைச் செலுத்துவது பெரும் சவாலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வீதி அதிகாரசபையினர் உடனடியாகச் சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்க வேண்டும் எனப் பிரதேச மக்களும் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Exit mobile version