வட பகுதி கடலில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில், சட்டவிரோத மீன்பிடி மற்றும் சட்டவிரோதப் பயணம் தொடர்பான குற்றங்களுக்காக 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்தியக் கடற்றொழிலாளர்கள் மற்றும் சட்டவிரோதப் பயணத்தை மேற்கொண்டவர்கள் உட்பட மொத்தமாக 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் முன்னெடுத்த ரோந்து நடவடிக்கையின் போது 3 இந்தியப் படகுகள் உள்ளிட்ட நான்கு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சட்டவிரோதப் பயணத்தை மேற்கொண்டதாகக் கூறப்படும் வர்த்தகர் உள்ளிட்ட குழுவினர் இந்த 35 பேருக்குள் உள்ளடங்குகின்றனரா என்பது தொடர்பில் இன்னமும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

