அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பென்டகன் வெளியிட்டுள்ள புதிய ‘தேசிய பாதுகாப்பு மூலோபாயம்’, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள 34 பக்க அறிக்கையில், இனி அமெரிக்காவின் தாயகப் பாதுகாப்பு மற்றும் மேற்கு அரைக்கோளத்தின் பாதுகாப்புக்கே முதலிடம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் சீனா மிக முக்கியமான பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டது.
ஆனால், புதிய கொள்கையின்படி சீனாவுடனான உறவு “மோதலுக்குப் பதிலாக வலிமையுடன்”அணுகப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நேட்டோ (NATO) போன்ற கூட்டணி நாடுகள் தங்களின் பாதுகாப்புச் செலவினங்களை தாங்களே ஏற்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது.
“மற்ற நாடுகளின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா இனி மானியம் வழங்க முடியாது” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
“வெற்று இலட்சியவாதத்தை விடுத்து, கடினமான யதார்த்தத்தை நோக்கிப் பயணிப்போம்” என்று பென்டகன் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் பிரச்சனைகள் அனைத்தும் அமெரிக்காவின் பிரச்சனைகள் அல்ல என்பது இதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
யுக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கி நான்கு ஆண்டுகளாகும் நிலையில், ரஷ்யாவை ஒரு “கையாலக்கூடிய அச்சுறுத்தல்” என்றே அமெரிக்கா கருதுகிறது.
ஐரோப்பிய நாடுகளே இதற்குத் தலைமை தாங்கிப் பதிலடி கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது.
முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த அறிக்கையில் ‘தாய்வான்’ பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.
எனினும், சீனா எங்களை ஆதிக்கம் செலுத்துவதைத் தடுப்போம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
வடகொரியாவை எதிர்கொள்ளும் முழுப் பொறுப்பையும் தென் கொரியாவே ஏற்க முடியும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கம், அமெரிக்காவிற்கு நேரடியாகப் பலன் தரும் பகுதிகள் மீது மட்டும் கவனம் செலுத்துகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பனாமா கால்வாய், அமெரிக்க வளைகுடா, கிரீன்லாந்து போன்ற இடங்களுக்கான இராணுவ மற்றும் வணிக ரீதியான அணுகலை உறுதி செய்வதே அமெரிக்காவின் இலக்காகும்.
அமெரிக்காவின் இந்த முடிவை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் விமர்சித்துள்ளார்.
“விதிகள் இல்லாத உலகத்தை நோக்கி நாம் நகர்கிறோம்” என்று அவர் எச்சரித்துள்ளார்.
கனடா பிரதமர் மார்க் கார்னி கூறுகையில், “பழைய உலக ஒழுங்கு இனி திரும்பப் போவதில்லை கனடா, ஆஸ்திரேலியா போன்ற நடுத்தர நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்” என்று வலியுறுத்தியுள்ளார்.

