உத்தரப் பிரதேசத்தின் நொய்டா பகுதியில் காதலர் தினத்தன்று சிற்றூந்து ஒன்றினுள் இளம் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில், நீண்டகாலக் காதல் மற்றும் துரோகம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 15 ஆண்டுகளாகக் காதலித்து வந்த காதலி, வேறொருவரைத் திருமணம் செய்ய முயன்றதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தீபக் என்ற இளைஞர் இக்கொலையைச் செய்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணும், சந்தேகநபரான தீபக்கும் பாடசாலைக் காலத்திலிருந்தே ஒருவரையொருவர் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டியிருந்த போதிலும், அண்மைக்காலமாக இருவருக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதன் உச்சகட்டமாக, அந்தப் பெண் தீபக்கைப் பிரிந்து வேறொருவரைத் திருமணம் செய்யத் தீர்மானித்துள்ளார்.
காதலர் தினத்தன்று (பிப்ரவரி 14) அந்தப் பெண்ணைத் தனது காரில் அழைத்துச் சென்ற தீபக், பயணத்தின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த தீபக், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் பெண்ணைச் சுட்டுக்கொன்றார். கொலையைச் செய்த பின், தனது நண்பர் ஒருவருக்கு வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், “அவள் என்னைத் தவிர்த்துவிட்டு வேறொருவரைத் திருமணம் செய்ய முடிவெடுத்ததால் அவளைக் கொன்றுவிட்டேன்” எனத் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த நொய்டா காவல்துறையினர், தலைமறைவாக இருந்த தீபக்கை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அன்பைப் பரிமாறிக்கொள்ளும் காதலர் தினத்தன்று, 15 வருடக் காதல் படுகொலையில் முடிந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

