கென்யாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து பயணித்த ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையம் (Kenya Civil Aviation Authority) தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சுற்றுலாத் தலமான டயானியிலிருந்து, மாசாய் மாரா தேசியப் பூங்காவில் அமைந்துள்ள கிச்வா டெம்போ (Kichwa Tembo) என்ற தனியார் விமான ஓடுபாதைக்குச் செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை உள்ளூர் நேரப்படி 5:30 மணியளவில் (0230 GMT) விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துக்கான காரணத்தை நிறுவ, அரசு நிறுவனங்கள் ஏற்கனவே சம்பவ இடத்தில் இருப்பதாகவும், மேலதிக விவரங்களைத் தற்போது தெரிவிக்க முடியாது என்றும் விமானப் போக்குவரத்து ஆணையகம் கூறியுள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம், மருத்துவ அரசு சாரா நிறுவனமான அம்ரெஃப் (AMREF)-க்கு சொந்தமான ஒரு இலகுரக விமானம் தலைநகர் நைரோபியின் புறநகரில் விபத்துக்குள்ளானது. அந்தச் சம்பவத்தில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.