தெற்குக் கடற்பரப்பில் வைத்து சுமார் 270 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட இரண்டு பலநாள் மீன்பிடிப் படகுகளும், அதில் இருந்த 11 சந்தேகநபர்களும் இன்று (25) திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
பொலிஸ் மாஅதிபருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கடற்படையினர் முன்னெடுத்த முதற்கட்ட சோதனையில், சுமார் 200 கிலோ போதைப்பொருளுடன் ஒரு படகும் 5 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.
அதே கடற்பரப்பில் தொடர்ந்த சோதனையில், மற்றுமொரு பலநாள் மீன்பிடிப் படகுடன் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து இரண்டு செய்மதித் தொலைபேசிகளும் (Satellite Phones) கைப்பற்றப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக இரண்டு படகுகளிலிருந்தும் ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ (Ice) ரக போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட இந்த பாரிய போதைப்பொருள் தொகையை, வெளிநாட்டிலிருந்து ‘தெஹிபால’ எனப்படும் கடத்தல்காரரே நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாகப் பாதுகாப்புத் தரப்பினர் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் சர்வதேச புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ளன.