வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்: இம்முறை கிராம உத்தியோகத்தர்கள் வீடு வீடாக வரமாட்டார்கள்!

Tamil News lrg 409614920251201060429

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை மறுதினம், பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கத் தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இம்முறை வாக்காளர் கணக்கெடுப்பில் மிக முக்கியமான மாற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தத்திற்காகக் கிராம உத்தியோகத்தர்கள் இம்முறை வீடு வீடாகச் செல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது.

எனவே, தமது வீட்டில் உள்ள வாக்காளர்களின் பெயர்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் மற்றும் புதிதாக உள்ளடக்கப்பட வேண்டிய பெயர்கள் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து கணக்கெடுப்பு அதிகாரிகளிடம் வழங்க வேண்டும்.

இந்தத் தகவல் திரட்டும் நடவடிக்கை அடுத்த இரண்டு மாத காலத்திற்குத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். திருத்தப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய பெயர் பட்டியல் காட்சிப்படுத்தல் மற்றும் ஆட்சேபனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவித்தல் மே மாதம் 05 ஆம் திகதி வெளியிடப்படும்.

மே 05 முதல் 28 நாட்களுக்குள் பொதுமக்கள் தமது உரிமைகோரல்கள் (Claims) மற்றும் ஆட்சேபனைகளைச் (Objections) சமர்ப்பிக்க வேண்டும்.

தகைமை இருந்தும் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் அல்லது தகுதியற்றவர்களின் பெயர்கள் உள்ளமை குறித்து ஆட்சேபனை தெரிவிப்போர் இதற்கான விண்ணப்பங்களைப் பயன்படுத்தலாம்.

அச்சிடப்பட்ட விண்ணப்பப் படிவங்களைத் தத்தமது பிரிவுக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தரிடமிருந்தோ அல்லது மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்திலிருந்தோ பெற்றுக்கொள்ள முடியும் எனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தமது ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில், வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்த்து ஒத்துழைக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அனைத்துப் பிரஜைகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

Exit mobile version