வவுனியா நகரில் மிகவும் அசுத்தமான முறையில் மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கி வந்த பல முன்னணி உணவகங்களை எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது பகுதிகளில் உள்ள உணவகங்கள் சிக்கியுள்ளன
கொறவப்பொத்தானை வீதி: இங்குள்ள இரண்டு முன்னணி உணவகங்கள்.
பழைய பேருந்து நிலையப் பகுதி: இங்குள்ள மிகவும் பிரபலமான சைவ உணவகம்.
MOH அலுவலகத்திற்கு அண்மித்த பகுதி: வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைக்கு மிக அருகிலேயே அமைந்திருந்த மற்றுமொரு உணவகம்.
சோதனையின் போது, சமையலறைகள் மிகவும் அசுத்தமாக இருந்தமை, பழுதடைந்த உணவுகளைச் சேமித்து வைத்திருந்தமை, முறையற்ற கழிவகற்றல் மற்றும் பூச்சிகளின் நடமாட்டம் ஆகியவை அவதானிக்கப்பட்டுள்ளன.
சுகாதாரப் பரிசோதகர்களால் இந்த விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட உணவகங்களை உடனடியாக மூடுமாறு உத்தரவிடப்பட்டது.
குறித்த உணவகங்களில் உள்ள சுகாதாரக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, உரிய திருத்தப்பணிகளை மேற்கொள்வதற்காக 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
14 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் முன்னெடுக்கப்படும் சோதனையில் திருப்திகரமான நிலை காணப்பட்டால் மட்டுமே மீண்டும் இயங்க அனுமதி வழங்கப்படும்.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில் சமரசம் செய்யும் உணவகங்களுக்கு எதிராக இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் தொடரும் எனச் சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.