முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், அவரது முன்னாள் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இரண்டாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் இந்த வழக்கு இன்று (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றைய விசாரணையின் போது நீதிமன்றில் முன்னிலையான சமன் ஏக்கநாயக்கவை, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபராக உத்தியோகபூர்வமாகப் பெயரிட்டது.
அதனைத் தொடர்ந்து, அவரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில், லண்டனில் நடைபெற்ற தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழேயே இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த நிதிப் பரிமாற்றங்கள் மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளில் சமன் ஏக்கநாயக்கவின் தலையீடு குறித்து CID விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
இந்த வழக்கின் முதல் சந்தேகநபரான ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில், மார்ச் மாதம் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.