யாழ்ப்பாணம் (பலாலி) சர்வதேச விமான நிலையத்தைப் பூரணமான முறையில் செயற்படுத்துவதற்கும், புதிய விமான சேவைகளை விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகக் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தின் தற்போதைய நிலைவரம் குறித்து அமைச்சர் வழங்கிய தகவல்கள் பொதுமக்கள் காத்திருப்புப் பகுதியின் (Passenger Waiting Area) புனரமைப்பு வேலைகள் தற்போது முடிவுறும் தருவாயில் உள்ளன.
கடந்த அரசாங்க காலத்தில் இந்த விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டாலும், அது ஒரு முழுமையான சர்வதேச விமான நிலையமாகச் செயற்படவில்லை. தற்போதைய அரசாங்கம் அதனை முழுவீச்சில் செயற்படுத்தும் பணிகளை முன்னெடுத்து வருகிறது.
விமான சேவைகளை விரிவுபடுத்துவது தொடர்பாகப் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச மற்றும் உள்ளூர் விமான சேவை நிறுவனங்களுடன் புதிய வழித்தடங்கள் குறித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
நாட்டின், குறிப்பாக வட மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த விமான நிலையம் ஒரு காத்திரமான பங்களிப்பை வழங்கும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எந்தவிதத் தடைகளுமின்றி நாட்டின் அபிவிருத்திப் பணிகளைத் திட்டமிட்டபடி முன்னெடுத்து வருவதாகவும், யாழ்ப்பாண விமான நிலையத்தின் அடுத்தகட்ட விரிவாக்கப் பணிகள் எதிர்காலத்தில் துரிதப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.