இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையே நிலவி வந்த வர்த்தக முறுகல் முடிவுக்கு வந்துள்ளதோடு, இரு நாடுகளுக்கும் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தியப் பொருட்கள் மீதான பரஸ்பர வரியை (Reciprocal Tariff) அமெரிக்கா உடனடியாக 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைத்துள்ளது.
ஏற்கனவே இந்தியாவுக்கு 25% பரஸ்பர வரி மற்றும் 25% கூடுதல் வரி என மொத்தம் 50% வரி விதிக்கப்பட்டிருந்தது. தற்போதைய ஒப்பந்தத்தின்படி, பரஸ்பர வரி 18% ஆகக் குறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் மோடி ஆகியோருக்கு இடையே நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நீண்ட தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைதளப் பதிவின் மூலம் ட்ரம்ப் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தினார்.
கடந்த ஓராண்டாக வரி விதிப்பு மற்றும் வர்த்தகக் கொள்கைகள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சுமுகமாக இருக்கவில்லை. இந்நிலையில், ட்ரம்பின் இந்தத் தீர்மானம் இருதரப்பு பொருளாதார உறவுகளை மீண்டும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள பிரதமர் மோடி, ஜனாதிபதி ட்ரம்பிற்குத் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

