முல்லைத்தீவில் கனமழை: முத்தையங்கட்டு குளம் வான்பாயும் அபாயம் – பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

IMG 20231218 16244935

முல்லைத்தீவு, நைனமடு பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக முத்தையங்கட்டு குளத்தின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முல்லைத்தீவு பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

நைனமடு பகுதியில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக முத்தையங்கட்டு குளத்திற்கு நீர் ஏந்தி வரும் ஆறுகள் மற்றும் ஓடைகள் வழியாக நீர்வரத்து சடுதியாக அதிகரித்துள்ளது.

குளத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை எட்டி வருவதால், எந்த நேரத்திலும் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

முத்தையங்கட்டு குளத்தின் தாழ்நிலப் (Downstream) பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக:

ஆற்றுப் படுக்கையை அண்மித்த பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு நகரத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

கால்நடைகள் மற்றும் விவசாய உபகரணங்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ பிரிவு நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், மேலதிக தகவல்களை உடனுக்குடன் அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

 

 

Exit mobile version