மதுவரி வருமான சேகரிப்பை முறைப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்திற்கு மதுவரித் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் தமது முழுமையான உடன்பாட்டைத் தெரிவித்துள்ளன.
கடந்த 03 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
திணைக்களத்தின் வினைத்திறனை அதிகரித்து, கசிவுகளைத் தவிர்ப்பதன் மூலம் அரச வருமானத்தை உயர்த்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்துவதன் மூலம் மதுவரி நிர்வாகத்தைச் சீரமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. நவீனமயமாக்கல் செயன்முறையுடன் இணைந்ததாக மனித வள அபிவிருத்தி மற்றும் உத்தியோகத்தர்களின் நலன்புரி விடயங்களை மேம்படுத்துவதற்கும் அவதானம் செலுத்தப்பட்டது.
மதுவரித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பிரேமரத்ன, அரச வருமான நிர்வாக சீர்திருத்தப் பணியகத்தின் பிரதிநிதிகள் மற்றும் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
மதுவரி வருமானம் சேகரிக்கப்படுவதில் நிலவும் முறைகேடுகளைக் களைந்து, ஒரு வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்குவதற்கு இந்தத் தொழிற்சங்கங்களின் ஆதரவு ஒரு பலமான அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.