மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக, அமெரிக்காவால் அண்மையில் கைது செய்யப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை (Nicolás Maduro) ஆர்ஜன்ரீனாவுக்கு நாடு கடத்துமாறு அந்நாட்டு நீதிமன்றம் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு மனித உரிமை அமைப்புகளால் ஆர்ஜன்ரீனாவின் பியூனஸ் அயர்சில் உள்ள நீதிமன்றத்தில் மதுரோவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கினை விசாரிக்கும் ஆர்ஜன்ரீனாவின் மத்திய குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செபாஸ்டியன் ராமோஸ் (Sebastián Ramos), மதுரோவை ஆர்ஜன்ரீனாவுக்கு நாடு கடத்துவதற்கான உத்தியோகபூர்வக் கோரிக்கையை வெளியுறவு அமைச்சு மூலம் அமெரிக்காவிடம் முன்வைத்துள்ளார்.
கடந்த ஜனவரி 03, 2026 அன்று கராகஸில் அமெரிக்க இராணுவம் நடத்திய விசேட அதிரடித் தாக்குதலில் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் கைது செய்யப்பட்டு நியூயோர்க்கிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மதுரோ மீது போதைப்பொருள் கடத்தல் மற்றும் ‘நார்கோ-பயங்கரவாதம்’ (Narco-terrorism) உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அமெரிக்கா சுமத்தியுள்ளது. தற்போது அவர் நியூயோர்க்கில் உள்ள ஒரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆர்ஜன்ரீனாவின் அரசியலமைப்பில் உள்ள ‘உலகளாவிய அதிகார வரம்பு’ (Universal Jurisdiction) என்ற விதியின் அடிப்படையில், உலகில் எங்கு மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டாலும் அது குறித்துத் தங்கள் நாட்டு நீதிமன்றங்களில் விசாரிக்க முடியும். 2014-ஆம் ஆண்டு முதல் வெனிசுலாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட ஒடுக்குமுறைகள் மற்றும் படுகொலைகளுக்கு மதுரோவே பொறுப்பு என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆர்ஜன்ரீனா மற்றும் அமெரிக்கா இடையே 1997-ஆம் ஆண்டு நாடு கடத்தல் ஒப்பந்தம் உள்ளது. இருப்பினும், மதுரோ ஏற்கனவே அமெரிக்காவில் பாரிய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருவதால், அமெரிக்கா அவரை ஆர்ஜன்ரீனாவிடம் ஒப்படைக்குமா என்பது சந்தேகமே என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.