படுகொலை செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி, ‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தலை முன்னிட்டு மட்டக்களப்பில் நேற்று (27) மாலை உணர்வுப்பூர்வமான தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்தி பூங்காவிலுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத் தூபிக்கு அருகில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. மட்டக்களப்பு ஊடக அமையம், மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் கிழக்கிலங்கைச் செய்தியாளர் சங்கம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
மட்டக்களப்பு ஊடக அமையத்தின் தலைவர் வா. கிருஸ்ணகுமார் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
ஆரம்ப நிகழ்வாக நினைவுத் தூபிக்கு முன்னால் சுடர் ஏற்றப்பட்டு, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.அஞ்சலியைத் தொடர்ந்து, ஊடகவியலாளர்கள் கைகளில் தீப்பந்தங்களை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடைபெற்ற இடத்தைச் சூழ பெருமளவிலான பொலிஸாரும் புலனாய்வுத் துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் பின்வரும் விடயங்களை வலியுறுத்தினர். நாட்டின் உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கை அற்ற சூழலில், ஊடகவியலாளர் படுகொலைகள் குறித்து சர்வதேச நீதிப் பொறிமுறையின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலின்றிப் பணியாற்ற ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் இலங்கையில் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களில் பெரும்பாலோர் தமிழ் ஊடகவியலாளர்கள் என்பதுடன், அவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.