இலங்கையில் தற்போது நிலவும் பேரிடர் நிலைமை (Disaster Situation) மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராகக் குற்றவியல் வழக்குத் (Criminal Case) தொடரவுள்ளதாக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (Samagi Jana Balawegaya – SJB) அறிவித்துள்ளது.
இன்று ஊடகங்களுக்கு உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் இதனைத் தெரிவித்தார்.
குறித்த பேரிடர் நிலைமை 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைப் போலவே தீவிரமான சம்பவம் என அவர் ஒப்பிட்டுக் கூறியுள்ளார்.
“ராஜபக்சக்கள் நாட்டை திவாலாக்கியதற்காக அவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைப் போலவே, தற்போதைய அரசாங்கத்திற்கும் எதிராக நாங்கள் வழக்குத் தாக்கல் செய்வோம், ஏனெனில் பேரழிவில் உயிரிழந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.
பேரழிவுகள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கைகள் வழங்கப்பட்ட போதிலும், அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதற்காக இந்த வழக்குத் தொடரப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்துள்ளார்.