தேசிய மக்கள் சக்தியின் ஹட்டன் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தச் சம்பளம் எவ்விதப் போராட்டங்களுமின்றி அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 10-ஆம் திகதி தொழிலாளர்களுக்கு 1,750 ரூபா சம்பளம் நிச்சயமாகக் கிடைக்கும்” என பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் டீ.கே.டபிள்யூ (DKW) கலாசார மண்டபத்தில் இன்று நடைபெற்ற தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் ஆற்றிய உரையில் சம்பள அதிகரிப்பைத் தொடர்ந்து, மலையக மக்களுக்கான காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் பணிகளும் விரைவில் முன்னெடுக்கப்படும்.
கடந்த காலங்களில் கல்வித்துறை மற்றும் அரச சேவைகளில் நிலவிய அரசியல் தலையீடுகள் தற்போது முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. இதனால் அதிகாரிகள் சுதந்திரமாகச் செயற்பட முடிகிறது.
அரசியல் தலையீடுகள் இல்லாத காரணத்தினாலேயே, தற்போது போதைப்பொருள் மாஃபியாக்களை அச்சமின்றி பொலிஸாரால் கைது செய்ய முடிகிறது.
கல்வி என்பது சமூக விடிவின் கண் போன்றது. அதிகாரிகள் மக்களுக்குச் சரியாகச் சேவை செய்யாத பட்சத்தில் மாத்திரமே அமைச்சின் தலையீடு இருக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.
இந்த நிகழ்வின் போது, பயிற்சியினை நிறைவு செய்த 400 மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களின் எதிர்காலம் சிறக்கப் பிரதி அமைச்சர் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.