நீண்டகாலமாக வெற்றிடமாக நிலவிவரும் கணக்காய்வாளர் நாயகம் (Auditor General) பதவிக்கு ஒருவரை நியமிப்பது குறித்து தீர்மானிப்பதற்காக, அரசியலமைப்புச் சபை இன்று (03) நண்பகல் 12.00 மணிக்குக் கூடவுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது.
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பெயர்கள் குறித்து சபை விரிவாக ஆராய்ந்து, இன்றைய தினத்திற்குள் இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்கிரமரத்ன ஓய்வுபெற்ற பின்னர் கடந்த 10 மாதங்களாக (ஏப்ரல் 08 முதல்) இந்தப் பதவி வெற்றிடமாகவே உள்ளது. ஜனாதிபதி ஏற்கனவே பரிந்துரைத்த பெயர்கள் அரசியலமைப்புச் சபையினால் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
பெப்ரவரி மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று காலை ஆரம்பமானது. 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (04) பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறாது.
நாளை மறுதினம் முதல் இவ்வார வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்றம் தொடர்ச்சியாகக் கூடும் என செயலாளர் நாயகம் அலுவலகம் அறிவித்துள்ளது.