இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மூத்த புதல்வி சமித்ரி ரம்புக்வெல்ல, இன்று (06) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் முறையற்ற முறையில் ஈட்டப்பட்ட பணத்தை மறைப்பதற்கும், கையாள்வதற்கும் (பணச் சுத்திகரிப்பு – Money Laundering) உதவியளித்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர் கைது செய்யப்பட்டார்.இன்று பிற்பகல் கொழும்பு பிரதம நீதவானின் உத்தியோகபூர்வ அறையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதவான், பின்வரும் நிபந்தனைகளுடன் அவரைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்:
தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள்.வெளிநாடு செல்வதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் விசாரணைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தரம் குறைந்த மனித இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) மருந்துக் கொள்வனவு தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கில் ஏற்கனவே கெஹலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சூழலில், தற்போது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.