நிர்ணய விலை மீறினால் ஒரு லட்சம் ரூபா தண்டம்!
அத்தியாவசியப் பொருள்களின் நிர்ணய விலைக்கு மேலதிகமாக பொருள்களை விற்பனைசெய்யும் வர்த்தகர்களுக்கு ஒரு லட்சம் ரூபா தண்டம் விதிப்பதற்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வர்த்தகத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விற்பனை விலை தொடர்பில் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிர்ணய விலைக்கு மேலதிகமாக பொருள்களை விற்பனை செய்ய முடியாது.
அவ்வாறு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கான தண்டம் 2 ஆயிரத்து 500 ரூபா என்று நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தண்டப்பணம் குறைவாக உள்ள காரணத்தால் குற்றங்கள் அதிகவிலும், சாதாரணமாகவும் இடம் பெறுகின்றன.
எனவே தண்டப்பணத்தை ஒரு லட்சம் ரூபாவாக அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.