இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நாடே ஒன்றாக’ தேசிய விசேட வேலைத்திட்டத்தின் கீழ், கடந்த சில வாரங்களில் பாரிய அளவிலான கைதுகளும் போதைப்பொருள் மீட்புகளும் பதிவாகியுள்ளன.
கடந்த ஒக்டோபர் 30-ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் மொத்தம் 47,703 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தச் சோதனைகளின் போது சந்தேக நபர்களிடமிருந்து பின்வரும் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன:
ஹெரோயின்: 276 கிலோகிராம் 374 கிராம்
ஐஸ் போதைப்பொருள்: 1,002 கிலோகிராம் 923 கிராம்
கஞ்சா: 1,411 கிலோகிராம் 936 கிராம்
இதுதவிர ஹஷிஷ் உள்ளிட்ட ஏனைய நச்சுப் போதைப்பொருட்களும் மீட்பு.
கைது செய்யப்பட்டவர்களில் 1,081 பேருக்கு எதிராக மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 1,130 சந்தேக நபர்கள் புனர்வாழ்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், 47 சந்தேக நபர்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்துக் குவிப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.