தோட்டத் தொழிலாளர்களின் 1,750 ரூபா சம்பளத்தை வர்த்தமானியில் உடனே வெளியிடுங்கள் – நாடாளுமன்றில் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

Jeevan Thondaman

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ள 1,750 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை அரசாங்கம் உடனடியாக வர்த்தமானியில் (Gazette) வெளியிட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

இன்று (08) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர் தற்போதைய அரசாங்கம் தனது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பள அதிகரிப்பை வழங்குவதாக உறுதியளித்திருந்தது.

அரசாங்கத்தின் இந்த வாக்குறுதியை நம்பியே வரவு செலவுத் திட்டத்திற்குத் தாம் ஆதரவாக வாக்களித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

வழங்கப்பட்ட வாக்குறுதியைச் சட்டப்பூர்வமாக்கும் வகையில் அதனை உடனடியாக வர்த்தமானியில் அறிவிப்பதன் மூலம், அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மேலும் அதிகரிக்கும்.

எச்சரிக்கை: “மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கைக்குத் துரோகம் இழைத்துவிட வேண்டாம்” என அவர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகாலப் போராட்டமான அடிப்படைச் சம்பள உயர்வு விவகாரம், தற்போதைய பொருளாதாரச் சூழலில் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. 1,750 ரூபாய் அடிப்படைச் சம்பளம் வழங்கப்படுமா என்பது குறித்த எதிர்பார்ப்பு மலையக மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், ஜீவன் தொண்டமானின் இந்தக் கோரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

 

 

Exit mobile version