லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் (Yoon Suk Yeol) மனைவி கிம் கியோன் ஹீக்கு (Kim Keon Hee) அந்நாட்டு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து புதன்கிழமை (28) தீர்ப்பளித்துள்ளது.
சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் யூனிஃபிகேஷன் (Unification) தேவாலயத்திடம் இருந்து லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக அவருக்கு ஒரு வருடம் மற்றும் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அவர் மீது சுமத்தப்பட்டிருந்த பங்கு விலை கையாளுதல் (Stock Manipulation) மற்றும் அரசியல் நிதிச் சட்ட மீறல் ஆகிய கூடுதல் குற்றச்சாட்டுகளிலிருந்து போதிய ஆதாரங்கள் இன்றி நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.
கிம் கியோன் ஹீ மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தென் கொரிய அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தன. வணிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் யூனிஃபிகேஷன் தேவாலயத்திடம் இருந்து சுமார் $200,000 (இரண்டு இலட்சம் டாலர்கள்) பணத்தைப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
பணத்திற்கு மேலதிகமாக, இரண்டு ‘சேனல்’ (Chanel) ரக கைப்பை மற்றும் வைர நெக்லஸ் உள்ளிட்ட பல இலட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த பொருட்களை அவர் லஞ்சமாகப் பெற்றதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
தென் கொரிய வரலாற்றில் ஒரு முதல் பெண்மணி லஞ்சக் குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை பெறுவது இதுவே முதல் முறை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.