தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில், கீரிப்பிள்ளை கடித்த காயத்தை முறையாகக் கவனிக்காததால் ‘நீர் வெறுப்பு’ (Rabies) நோயால் பாதிக்கப்பட்டு 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு, சிறுவன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, கோழியைப் பிடிக்க வந்த கீரிப்பிள்ளை ஒன்று அவனது கையைக் கடித்துள்ளது.
காயம் ஏற்பட்டபோது பெற்றோர் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காமல், மருந்தகம் (Pharmacy) ஒன்றில் மாத்திரை வாங்கித் தந்துள்ளனர். இதனால் வைரஸ் பாதிப்பு குறித்து அவர்கள் அறிந்திருக்கவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவனுக்குக் கடும் காய்ச்சல் ஏற்பட்டு, உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உயிரிழப்பதற்கு முன்னதாக சிறுவன் தண்ணீரைப் பார்த்துப் பயந்ததோடு (Hydrophobia), கீரிப்பிள்ளையைப் போலவே விசித்திரமான செய்கைகளில் ஈடுபட்டதாக அவனது தந்தை தெரிவித்துள்ளார்.
வைரஸ் மூளையைப் பாதித்ததால், சிகிச்சை பலனின்றி கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு சிறுவன் உயிரிழந்தான்.
சிகிச்சையில் அலட்சியம் காட்டியதாகப் பெற்றோர் குற்றம் சாட்டிய போதிலும், நீர் வெறுப்பு நோய் முற்றிய நிலையில் அதைக் குணப்படுத்த மருந்துகள் இல்லை என மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இது போன்ற விலங்கு கடி சம்பவங்களின் போது பொதுமக்கள் பின்பற்ற வேண்டியவை:
நாய், பூனை, குரங்கு அல்லது கீரி கடித்தால், காயத்தை ஓடும் நீரில் சவர்க்காரம் இட்டு 15 நிமிடங்கள் கழுவ வேண்டும்.
காலம் தாழ்த்தாமல் அரசு மருத்துவமனைகளை அணுகி ரேபிஸ் (Rabies) தடுப்பூசி போட்டுக்கொள்வதே உயிரைக் காக்க ஒரே வழியாகும்.
இந்தச் சோகமான சம்பவம் விலங்கு கடிக்கான முதலுதவி மற்றும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வைக் கிராமப்புற மக்களிடையே ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது.