ஆடை திருடிய நபரைத் தலைகீழாகத் தொங்கவிட்டுத் தண்டிப்பதாகச் சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளி, மதுபானத்திற்காகத் திட்டமிட்டு எடுக்கப்பட்ட ஒரு போலி காணொளி என்பது பொலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
கடந்த ஜனவரி 26 ஆம் திகதி கட்டுநாயக்க பகுதியில் உள்ள வீடொன்றில் நண்பர்கள் மூவர் இணைந்து மது அருந்தியுள்ளனர். அப்போது வீட்டின் உரிமையாளர், தலைகீழாகத் தொங்குபவருக்கு ஒரு மதுபான போத்தல் பரிசாக வழங்கப்படும் எனச் சவால் விடுத்துள்ளார்.
மதுவுக்கு ஆசைப்பட்ட 39 வயதுடைய நபர், தனது கால்களைத் தானே கட்டிக்கொள்ள, ஏனைய இருவரும் அவரை மாமரம் ஒன்றில் தலைகீழாகத் தொங்கவிட்டுள்ளனர்.
அந்த நபர் தொங்கிக்கொண்டிருந்த போது, “திருடர்களுக்கு இதுதான் தண்டனை, காவல்துறை தேவையில்லை” என உரிமையாளர் பின்னணி வசனம் பேசி காணொளியைப் பதிவு செய்துள்ளார்.
இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியானதும், நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதோ என்ற அச்சத்தைப் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. ஆனால், காணொளி எடுத்து முடிந்ததும் மூவரும் கலைந்து சென்று நிம்மதியாக உறங்கியது விசாரணையில் தெரியவந்தது.
பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் மற்றும் சமூக வலைத்தளங்களைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சம்பந்தப்பட்ட மூவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கக் கட்டுநாயக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இது குறித்து மேலதிக சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன.

