நாட்டின் பொருளாதார மற்றும் கலாசார பாதுகாப்புக்குத் தரமான மனித வளமே அஸ்திவாரம் என்றும், அதனை உருவாக்கக் கல்வியில் பாரிய மாற்றத்தைக் கொண்டுவர அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அரசு பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட கல்வி கூட்டுறவுச் சங்க (EDCS) உறுப்பினர்களின் பிள்ளைகளுக்காகப் புலமைப்பரிசில் வழங்கும் விழா இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது 2,292 மாணவர்களுக்காக 13.7 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி பகிர்ந்தளிக்கப்பட்டது.
1930 இல் வெறும் 58 உறுப்பினர்களுடன் தொடங்கிய EDCS, இன்று 2,15,000 உறுப்பினர்களுடன் தெற்காசியாவின் மிகப்பெரிய சங்கமாக வளர்ந்துள்ளது ஒரு சாதனை.
ஆண்டுதோறும் 3 இலட்சம் மாணவர்கள் பாடசாலைக்குச் சென்றாலும், 40,000 பேருக்கு மட்டுமே பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்கிறது. இந்த அரிய வாய்ப்பைப் பெற்ற மாணவர்கள் நாட்டின் மாற்றத்தின் முன்னோடிகளாக மாற வேண்டும்.
கல்வித்துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவரும்போது ஏற்படும் தடைகளைத் தகர்த்து, தெளிவான இலக்குடன் முன்னோக்கிச் செல்வோம் எனப் பிரதமர் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட தொழிலாளர் துறை பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குறிப்பிடுகையில் ஊழலற்ற நிர்வாகத்தினால் சங்கத்தின் நிதி ஸ்திரத்தன்மை கடந்த 9 மாதங்களில் 1,200 மில்லியன் ரூபாயிலிருந்து 1,700 மில்லியன் ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
இம்முறை தெரிவு செய்யப்பட்ட ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக 75,000 ரூபா வரை புலமைப்பரிசில் வழங்கப்படுகிறது.
மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தர்ஷனி இத்தமல்கொட உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வு, மாணவர்களின் கல்வி ஆர்வத்தை ஊக்குவிக்கும் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.