ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ‘ஸ்மார்ட்’ அரசியலைத் தழுவிய ஒரு புதிய தலைமுறைத் தலைமைத்துவத்தை நோக்கி நகர்வதாக முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகமான ‘சிறிகொத்த’வில் ‘SMART UNP’ டிஜிட்டல் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து அவர் உரையாற்றினார்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் பிறந்த இளைய சமூகத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய தருணம் இதுவென அவர் சுட்டிக்காட்டினார்.
மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன மில்லினியர் (Millennials) தலைமுறையைத் தயார்படுத்தியது போல, தான் இப்போது ‘ஜென் ஸீ’ (Gen Z) தலைமுறையிடம் பொறுப்புகளை ஒப்படைக்கத் தயாராகி வருவதாகக் குறிப்பிட்டார்.
இன்றைய உலக அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப இலங்கைத் தலைவர்கள் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நாம் இப்போது ஜே.ஆர். ஜயவர்தனவின் யுகத்தில் இல்லை; ட்ரம்பின் உலகிலும், அவருக்குச் சவால் விடும் சீனாவின் ஆதிக்கம் நிறைந்த உலகிலும் வாழ்கிறோம்.
அண்டை நாடான இந்தியா ஒரு வல்லரசாக உருவெடுத்து வரும் சூழலை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஸ்மார்ட் அரசியல் மற்றும் நவீன தொழில்நுட்பங்களைத் தழுவாமல் எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ள முடியாது.
பல கட்சி ஜனநாயக ஆட்சி முறையிலேயே நாடு முன்னேற்றமடைந்துள்ளது. அந்த ஜனநாயகத்தைப் பாதுகாத்து நிலைநிறுத்த அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என அவர் தனது உரையில் அறைகூவல் விடுத்தார்.