சிலாபம் – குருநாகல் வீதியின் மேல் கொஸ்வத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில், வீதியோரத்தில் நடந்து சென்ற 13 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று (01) பிற்பகல் சிலாபம் நோக்கி அதிவேகமாகச் சென்ற பாரவூர்தி (Lorry) ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் மீது மோதியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த இரண்டு சிறுவர்களும் உடனடியாக சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி 13 வயதுடைய சிறுவன் உயிரிழந்தான்.
ஹல்மில்லேவ பகுதியைச் சேர்ந்த சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.மற்றைய சிறுவன் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதியைப் பிங்கிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சாரதியின் கவனக்குறைவு அல்லது வாகனத்தின் தொழில்நுட்பக் கோளாறு விபத்துக்குக் காரணமா என்பது குறித்துப் பிங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.