ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு விசேட டிஜிட்டல் அங்குரார்ப்பண நிகழ்வை நாளை (04) கட்சியின் தலைமையகமான ‘சிறிகொத்த’வில் நடத்தவுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளையும் உள்ளடக்கும் வகையில், ‘டிஜிட்டல் வார்டு ஒருங்கிணைப்பாளர்கள்’ (Digital Ward Coordinators) நியமனம் நாளை ஆரம்பிக்கப்படும். முதற்கட்டமாக 1,000 அதிகாரிகளுக்கு அன்றைய தினம் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
கட்சி உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே நேரடித் தொடர்பை ஏற்படுத்தவும், தகவல்களை விரைவாகப் பரிமாறவும் புதிய ‘UNP App’ விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த டிஜிட்டல் மாற்றத்தின் ஒரு அங்கமாக, கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் எலான் மாஸ்க்கின் ‘ஸ்டார்லிங்க்’ அதிவேக செயற்கைக்கோள் இணைய வசதி நாளை உத்தியோகபூர்வமாகத் தொடக்கி வைக்கப்படவுள்ளது.
கட்சியின் செயல்பாடுகளை மிகவும் வினைத்திறனானதாகவும், வேகமானதாகவும் மாற்றுவதோடு, அடிமட்டத் தொண்டர்களுடன் டிஜிட்டல் தளங்கள் ஊடாக நெருக்கமான தொடர்பைப் பேணுவதே இந்த நவீனமயமாக்கலின் முக்கிய நோக்கமாகும் எனப் பிரதிப் பொதுச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.