திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடனான தொடர்பு குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (02) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியிருந்தார்.
சுமார் சில மணிநேர விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் குறிப்பிட்டதாவது, கெஹெல்பத்தர பத்மே எனது கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை என்னுடன் நெருங்கிய அரசியல் உறவைக் கொண்டிருந்தார். ஆனால், பத்மேவுடன் எனக்கு அந்தளவிற்கு நெருக்கமான அரசியல் தொடர்புகள் இல்லை என்பதை அதிகாரிகளிடம் தெளிவுபடுத்தியுள்ளேன்.
தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விசாரணையின் பின்னர் அரசாங்கத்தின் தற்போதைய செயல்பாடுகளை அவர் கடுமையாகச் சாடினார்:அரசாங்கம் தனது திறமையின்மைகளையும், தவறுகளையும் மறைக்கவே தினந்தோறும் அரசியல்வாதிகளைக் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைத்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புகிறது.
நாடு பாரிய நிதி நெருக்கடியில் உள்ளது. அரசாங்கம் வழங்கிய காசோலைகள் கூட வங்கிகளில் மறுக்கப்படுகின்றன. கதிர்காம விகாரையின் நிதியைக் கூடப் பெற அரசாங்கம் முயற்சிக்கிறது.அரசு ஊழியர்கள் மிகுந்த விரக்தியில் உள்ளனர், நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஒருவர் திட்டமிட்ட குற்றவாளியுடனான தொடர்பு குறித்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை அரசியல் தளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

