2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில், சதொசவின் முன்னாள் சிரேஷ்ட விநியோக முகாமையாளர் உள்ளிட்ட மூவர் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நேற்று (29) கைது செய்யப்பட்டனர்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் சமர்ப்பித்த விபரங்களின்படி 2021 இல் சுங்கத்தினால் அரசுடைமையாக்கப்பட்ட 54,860 கிலோ வெள்ளைப்பூண்டை, சதொச ஊடாகப் பொதுமக்களுக்குச் சலுகை விலையில் வழங்க அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது.
ஆனால், குறித்த வெள்ளைப்பூண்டுத் தொகையை பொதுமக்களுக்கு வழங்காமல், தனியார் நிறுவனம் ஒன்றிற்கு மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்துள்ளனர்.
அக்காலத்தில் ஒரு கிலோ வெள்ளைப்பூண்டு 445 ரூபாவிற்கு விற்கப்பட்ட நிலையில், அதனை வெறும் 135 ரூபாவிற்கு விற்பனை செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 17,006,660 ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். வெள்ளைப்பூண்டு பழுதடையும் நிலையில் இருந்ததால், நிறுவன ரீதியாக எடுக்கப்பட்ட முடிவின்ப்படியே அது விற்பனை செய்யப்பட்டதாகச் சட்டத்தரணிகள் வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதவான், சந்தேகநபர்களைத் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்.
அத்துடன் அவர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதித்த நீதவான், வழக்கை மீண்டும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க உத்தரவிட்டார்.

