விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் குமரன் பத்மநாதன் (கே.பி.) கைது விவகாரம் மற்றும் அது தொடர்பான தற்போதைய அரசியல் வாதங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். கே.பி.யைச் சுரேஷ் சலே தான் கைது செய்தார் என்று தற்போது சிலர் வீணான பெருமை பேசி வருவதாகச் சாடிய பொன்சேகா, உண்மையான பின்னணியைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
தாம் முப்படைகளின் பிரதானியாக இருந்த காலத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து விபரித்த பொன்சேகா, “மலேசியாவில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராஜதந்திர ரீதியாகத் தகவல் வந்ததையடுத்து, புலனாய்வுக் குழு ஒன்று அங்கு சென்று அவரை அழைத்து வந்தது. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்ததும், அவரைப் பொறுப்பேற்ற புலனாய்வாளர்கள், ‘இவர் கே.பி, இவரை உங்களிடம் பாரப்படுத்துகிறோம், நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்’ என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டனர். அதன் பின்னரே சி.ஐ.டியினர் கோட்டாபய ராஜபக்சவிற்கு அறிவித்தனர்” என்று தெரிவித்தார்.
கே.பி. இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட விதம் குறித்துப் பேசிய அவர், “விமான நிலையத்திலிருந்து கே.பி. நேரடியாகக் கோட்டாபயவின் வீட்டிற்கே அழைத்துச் செல்லப்பட்டார். அவர் குற்றப்புலனாய்வுத் துறையில் சிறிது காலம் இருந்தபோதிலும், முறையாகச் சிறையில் அடைக்கப்படவில்லை. பின்னர் அவர் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
முக்கியமாக, கே.பி. வசம் இருந்த புலிகளின் சொத்துக்கள் மற்றும் நிதி குறித்துப் பேசிய பொன்சேகா, “கே.பி. வசம் இருந்த கப்பல்கள் மற்றும் புலிகளின் பணம் ஆகியவற்றிற்கு என்ன ஆனது என்பது கோட்டாபயவிற்கு மட்டுமே தெரியும். அதன் பின்னர் கே.பியுடன் டீல் (Deal) பேசியது மகிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் தான். அவர்கள் அவருடன் என்ன டீல் பேசினார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது” என்று பகிரங்கமாகத் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

