ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டமூலத்தை அந்நாட்டின் நாடாளுமன்றக் கீழ் சபை (Chamber of Deputies) நேற்று (பிப்ரவரி 13) நிறைவேற்றியுள்ளது. ஜனாதிபதி ஜேவியர் மிலே (Javier Milei) தலைமையிலான அரசாங்கம் கொண்டு வந்த இந்த மசோதாவுக்கு 149 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 100 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.
நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பாட்ரிசியா புல்ரிச் (Patricia Bullrich) இது குறித்துத் தெரிவிக்கையில், போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் 16 வயதிற்கும் குறைவான சிறுவர்களைத் தற்காப்பாகப் பயன்படுத்திப் படுகொலைகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுத்துவது அதிகரித்துள்ளது. “பெரியவர்கள் செய்யும் குற்றங்களுக்குப் பெரியவர்களுக்குரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்ற கொள்கையின் அடிப்படையில், குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தவே இந்த வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளது.
14 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் கொலை, பாலியல் வன்புணர்வு அல்லது ஆயுதம் ஏந்திய கொள்ளை போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபட்டால், அவர்களுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும்.
குறைந்தபட்சத் தண்டனை உடைய குற்றங்களுக்குச் சிறைத்தண்டனைக்கு முன்னதாக சமூக சேவை, மின்னணு கண்காணிப்பு (Electronic Monitoring) மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
கீழ் சபையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, தற்போது இறுதி ஒப்புதலுக்காகச் செனட் சபைக்கு (Senate) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த முடிவுக்குப் பொதுமக்களிடையே 70 சதவீதத்திற்கும் அதிகமான ஆதரவு நிலவினாலும், UNICEF போன்ற சர்வதேச அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். சிறார்களைச் சிறையில் அடைப்பது அவர்களின் மறுவாழ்வுக்கான வாய்ப்புகளைச் சிதைத்துவிடும் என்றும், இது சர்வதேசச் சிறுவர் உரிமைகள் உடன்படிக்கைக்கு எதிரானது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். எனினும், பெருகி வரும் வன்முறையை ஒடுக்க இதுவே ஒரே வழி என்பதில் ஜேவியர் மிலே அரசு உறுதியாக உள்ளது.