இலங்கையின் கணக்காய்வாளர் நாயகம் (Auditor General) பதவி கடந்த பத்து மாதங்களாக வெற்றிடமாக உள்ள நிலையில், அந்தப் பதவிக்குத் திறந்த பல்கலைக்கழகத்தின் நிதி இயக்குநர் டபிள்யூ.எம்.கே.ஜி. விக்ரமசிங்கவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பரிந்துரை செய்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்தப் பரிந்துரையை ஆராய்வதற்காகச் சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு சபை நேற்று (30) பாராளுமன்ற வளாகத்தில் கூடியது. எனினும், இதன்போது இறுதி முடிவு எட்டப்படாத நிலையில், குறித்த பெயரை மீண்டும் பரிசீலிக்க அரசியலமைப்பு சபை இன்று (31) மீண்டும் கூடவுள்ளது.
முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் சூலந்த விக்ரமரத்ன ஏப்ரல் 2025 இல் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இந்தப் பதவி காலியாகியது.
இதற்கு முன்னர் ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட நான்கு பெயர்களையும் அரசியலமைப்பு சபை நிராகரித்திருந்தது. இது ஜனாதிபதி முன்மொழியும் ஐந்தாவது பெயராகும்.
தர்மபால கம்மன்பில பதில் கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றினார். எனினும், ஒரு பதில் பதவியை இரண்டு முறைக்கு மேல் நீடிக்க முடியாது என்ற சட்ட விதியின் காரணமாக, அவரது சேவை நீட்டிப்புக்குச் சபை அனுமதி வழங்கவில்லை. இதனால் டிசம்பர் 06 முதல் பதில் பதவியும் காலாவதியாகியுள்ளது.
ஜனாதிபதியால் தற்போது முன்மொழியப்பட்டுள்ள விக்ரமசிங்க, களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஆவார். தற்போது திறந்த பல்கலைக்கழகத்தின் நிதி இயக்குநராகப் பணியாற்றி வரும் இவரை, அரசியலமைப்பு சபை ஏற்குமா என்பது இன்றைய கூட்டத்தில் தெரியவரும்.
கணக்காய்வாளர் நாயகம் போன்ற முக்கிய அரசியலமைப்புப் பதவி நீண்டகாலமாக வெற்றிடமாக இருப்பது, அரச நிறுவனங்களின் நிதி மேலாண்மை மற்றும் கணக்காய்வுப் பணிகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.