வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழாவினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் மிகச் சிறப்பாக நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கடற்படை அதிகாரிகள், மதகுருமார்கள் மற்றும் அரச திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இம்முறை இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து சுமார் 25,000 பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள், குடிநீர் விநியோகம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, கடற்படையினரின் ஒத்துழைப்புடன் படகுப் போக்குவரத்துகளை முறைப்படுத்துவது குறித்துத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவின் அடையாளமாகத் திகழும் இந்தப் பெருவிழாவிற்குத் தேவையான சகல அடிப்படை வசதிகளையும் மாவட்ட செயலகத்தின் ஊடாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவு திருவிழாவானது இரு நாட்டு மீனவர்கள் மற்றும் கத்தோலிக்கப் பக்தர்கள் சந்திக்கும் ஒரு முக்கிய கலாசார நிகழ்வாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

