எரிபொருள் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணம் உயருமா? – போக்குவரத்து நெரிசலைக் காரணம்காட்டும் கெமுனு விஜேரத்ன!

1746078431 Bus fare 6

எரிபொருள் விலை அண்மையில் குறைக்கப்பட்ட போதிலும், போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நிலவும் கடுமையான வாகன நெரிசலால், ஒரு லீற்றர் டீசலுக்கு 2 கிலோமீற்றருக்கும் குறைவான தூரமே பயணிக்க முடிகிறது. தேசிய கொள்கையின்படி இது 2.5 முதல் 3 கி.மீ ஆக இருக்க வேண்டும்.

நெரிசலால் எரிபொருள் விரயமாவதுடன், பேருந்துகளை இயக்குவதில் பாரிய நஷ்டம் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கம் பதவியேற்று ஒன்றரை வருடங்களாகியும் பொதுப் போக்குவரத்துத் துறையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை எனவும், அதிகாரிகளிடையே ஊழல் நிலவுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த நஷ்டத்தைச் சமாளிக்க, எதிர்வரும் ஜூலை மாதத்திற்கு முன்னதாக கட்டணத் திருத்தம் செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

குறுகிய தூர சேவைகளுக்கான ஆரம்பக் கட்டணத்தை 5 முதல் 6 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது நாடு முழுவதும் சுமார் 14,000 தனியார் பேருந்துகள் சேவையில் உள்ள நிலையில், கொழும்பு பகுதிகளில் சேவையைத் தொடர்வது சவாலாக மாறியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

Exit mobile version